Wednesday, October 16, 2013

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?பாகம் - 2

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? பாகம் - 2

1.தரைக் கூட்ட இருக்கும் பாவாடையை தூக்கி பிடித்த படி பாத கொலுசில் ஜதி பாடி நடந்து வரும் போது.

2.பேருந்தில் தெரிந்தே இடிப்பவனுக்கு யாருக்குமே தெரியாமல் தண்டனை தரும் போது.

3.நான் இப்படியெல்லாம் வளர்ந்தேன் என்று பெருமை பேசாமல் உன்னை அழகாய் வளர்த்திருக்கிறார்கள் என்று அனைவரையும் சொல்ல வைக்கும் போது.

4.பொன்னகையே இல்லாமல் புன்னகையால் மட்டுமே தன்னை அலங்காரம் செய்து கொள்ளும் போது.

5.கோபத்தை உள்ளடக்காமல், பட பட வென எண்ணையில் போட்ட கடுகாய் பொறிந்துவிட்டு பின் தனியாய் அமர்ந்து அழும் போது.

6.ஆண்களை அடக்காமல் தானும் அடங்காமல் சமமாய் நிற்பதே பெண்ணுரிமை என்பதை உணரும் போது.

7.வாயாடி என யார் பட்டம் தந்தாலும் வாய் பேசுவதை நிறுத்தாமல் தன் இயல்பு நிலையிலேயே இருக்கும் போது.

8.அத்தி பூத்தாற் போல் அவ்வப்போது தன்னை அறியாமலேயே வெட்கப்படும் போது.

9.தன்னை விட பெரிய பாதுகாப்பு தனக்கு வேறு யாருமில்லை என்பதை உணர்ந்து செயல்படும் போது.

10.இவ்வளவு தான் உன் சுதந்திரம் என்பதை யாரும் சொல்வதற்கு முன்னரே, தன் சுதந்திரத்தின் எல்லையை தானே வகுத்துக் கொள்ளும் போது.

11.புல்லில் தங்கிய பனித்துளி போல ஈரக் கூந்தலின் நுனியில் இருந்து சொட்டும் தண்ணீரை தட்டி விட்ட படி கூந்தலை உலர்த்தும் போது.

12.தெரிந்த கேள்விக்கு தெரியாது என்றும் பிடித்ததை பிடிக்காது என்றும் வா என்னும் இடத்தில் போ என்றும் மாற்றி மாற்றி பதில் சொல்லி ஆண்களை குழப்பும் போது.

13.தனக்காக கண்ணீர் சிந்தும் ஆண் கிடைத்தால் அவனை எப்போதும் அழவிடாமல் பார்த்துக் கொள்ளும் போது.

மனதால் வீரமாக , குணத்தால் அன்பாக , செயலால் நேர்மையாக இருக்கும் எல்லா பெண்களுமே அழகு தான்.

-ஆதிரா.

No comments:

Post a Comment