Sunday, December 29, 2013

பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!

பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.

அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

நாவல் பழம் (நவ்வா பழம் )..!


"உணவே மருந்து"

நாவல் பழம் (நவ்வா பழம் )..!

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். 

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

தெரிந்து கொள்வோம்.......









 
தெரிந்து கொள்வோம்..........
-----------------------------------------------
1] ஒவ்வொரு சிறுநீரக த்திலும் சுமார் பத்து லட்சம் வடிகட்டிகள் உள்ளன! இவை நிமிடத்திற்கு 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன!!.

2] புன்னகை புரிவதன் மூலம் குறைந்தபட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது! நீங்க பொய்யா சிரிச்சாலும் அது உண்மையான விளைவை ஏற்படுத்தும்!!.

3] 129,000 துளி நீரில் கலந்துள்ள ஒரு துளி எலுமிச்சைச் சாறை நம்முடைய நாக்கு எளிதாக உணரும்!!.

4] ஏசு கிறிஸ்துவின் முதல் சீடர்- செயிண்ட் ஆண்ட்ரு!.

5] ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது, வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்!!.

6] முதலையின் அடி வயிற்றுப் பகுதி தோலில் "புல்லட் புரூவ்" உடை தயாரிக்கிறார்களாம்!!.

7] 24 கண்களுடனும் நான்கு மூளையுடனும் வாழும் Box Jellyfish தான் உலகின் மிக மிக ஆபத்தான விஷமான உயிரினம்!!.

8] மனித மூளையின் நினைவக திறன் 256 exabytes ( அதாவது 256 billion gigs ) இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது!.

9] கிட்டாரை உருவாக்கிய லியோ பெண்டருக்கு கிட்டார் வாசிக்கத் தெரியாது!!...

10] ஜனகணமன எனும் நமது தேசியகீதம் 1911- டிசம்பர் 27 அன்று கல்கத்தாவில் முதன்முதலாக பாடப்பட்டது!

1947 போலவே 2014 :ஆச்சரியம் ஆனால் உண்மை...

1947 போலவே 2014 :ஆச்சரியம் ஆனால் உண்மை....

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டு காலண்டரும் வரப்போகும் 2014 காலண்டரும் ஒரே கிழமை தேதியை கொண்ட ஒரேமாதிரியான வருடங்களாக அமைகின்றன!.


 இந்த புத்தாண்டு ஒரு சிறப்புடன் பிறக்க போகிறது. 67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிடர்கள் ஆரூடம் கூறி பீதியை கிளப்பி உள்ளனர். புத்தாண்டு பிறக்க போகிறது என்றாலே கணிப்புகளும் கச்சை கட்டி கொண்டு கலகலப்பாக கிளம்பி விடும். அந்த வகையில் 2014ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இப்போதே பலரும் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி நடக்கும், அப்படி நடக்கும், எப்படியும் ஏதாவது நடக்கும் என்ற ரேஞ்சுக்கு கணிப்புகள் வெளிவரும். இந்த ஆண்டு இந்த வாகனத்தில் புத்தாண்டு பிறந்துள்ளதால், ஆண்களுக்கு ஆகாது என்ற கூறி வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். சகோதரிகளுக்கு ஆகாது என ஒரு முறை கூறியதால் சகோதரர்கள், சகோதரிகளுக்கு பச்சை புடவையை வாங்கி கொடுத்து பரிகாரம் செய்தனர். இதுபோல் பல விஷயங்கள் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
ஆனால், பிறக்க போகும் 2014ம் ஆண்டு, 1947ம் ஆண்டு போலவே இருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு. கடந்த 1947ம் ஆண்டை போலவே 2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது. மற்ற தேதிகளும், கிழமைகளும் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அதே 1947ம் ஆண்டு காலண்டரை எடுத்து பார்த்தால், அப்படியே 2014ம் ஆண்டு காலண்டர் போலவே இருக்கும். இது போதாதா… 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதுபோன்ற மாற்றத்தை 2014ம் ஆண்டு இந்தியா மீண்டும் சந்திக்கும் என்று பலர் கணித்துள்ளனர். இப்போது 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வருவதால், இந்த ஆண்டில் இந்தியா பெரும் மாற்றத்தை காணும் என்றும் சில ஜோதிடயர்கள் பீதி கிளப்புகின்றனர். என்ன மாற்றம் வருகிறதோ, என்னவோ.. முதலில் புத்தாண்டு நல்லபடியாக பிறக்கட்டும்.

Saturday, December 28, 2013

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?



பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமுதாய இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகளை இங்கு காணலாம்.

ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தும் முன், முதல் கீயான மாடிபையர் கீ ( கீ போர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும்.
விண்டோஸ் இயக்கத்தில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு Alt+Shift, குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் Alt. இந்த கீகளுடன், கீழே தரப்படும் கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.


1. புதிய மெசேஜ் பெற - Alt + M
2. பேஸ்புக் சர்ச் - Alt + ?
3. நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ்- Alt + 1
4. உங்கள் புரபைல் பேஜ் - Alt + 2
5. நண்பர்களின் வேண்டுகோள்கள் – Alt + 3
6. மெசேஜ் மொத்தம் - Alt + 4
7. நோட்டிபிகேஷன்ஸ் - Alt + 5
8. உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் - Alt + 6
9. உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் – Alt +7
10. பேஸ்புக் ஹோம் பக்கம் - Alt + 8
9. பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம் - Alt + 9
10. பேஸ்புக் ஹெல்ப் சென்டர் - Alt + 0

இறுதியில் தரப்பட்டுள்ள கீகளை, மேலே குறிப்பிட்டது போல, அந்த மாடிபையர் கீயுடன் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக் காட்டாக, பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள், அவர்களின் புரபைல் பேஜ் பெற Alt+Shift+2 பயன்படுத்த வேண்டும்.

இந்த ஷார்ட்கட் கீகளில் உள்ள எண்களை, நம்லாக் செய்து கீ பேடில் இருந்து பயன்படுத்தக் கூடாது. எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான கீகளையே பயன்படுத்த வேண்டும்.

Friday, December 27, 2013

சிரிக்கலாம் வாங்க !!!

சிரிக்கலாம் வாங்க !!!

உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி
ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. .
என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக்
காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவன் கேட்டான் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக
அவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு
ஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.

எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?-
லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -

அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்...
------------------------------------------------------------------------------------------
செங்குத்தான மலைச்சரிவில் தவறி விழுந்தவன் ஒரு மரத்தின் வேரைப்பிடித்துக்கொண்டு தொங்கினான்.

“கடவுளே என்னைக் காப்பாத்தக்கூடாதா,” என்று ஓலமிட்டான்.

உடனே அசரீரியாய் கடவுளின் குரல் கேட்டது. “பக்தா என்மீது உனக்கு உண்மையிலேயே விசுவாசம் இருக்கிறதா?”

“என்ன ஆண்டவா இப்படிக் கேட்கிற? விசுவாசம் இல்லாமலா என் குடும்பத்தோட வருசா வருசம் உன் கோவிலுக்கு வந்து பூசை செய்றேன்? விசுவாசம் இல்லாமலா என் கம்பெனிக்கு உன் பெயரை வைச்சிருக்கேன்...”

“சரி உண்மையிலேயே என் மேல் நம்பிக்கை இருந்தால் நீ பிடித்துக்கொண்டிருக்கிற அந்த வேரை விட்டுவிடு.

சில நொடிகள் மவுனம். கடவுளுக்கே அவன் என்ன செய்யப்போகிறான் என்று புதிராகிவிட்டது.

அவன் இப்போது மறுபடியும் உ ரக்க ஓலமிட்டான்:
.
.
.

“என்னை வேற யாராவது காப்பாத்தக்கூடாதா...”



 ஒருத்தன் டாக்டர்கிட்ட போய்ட்டு, "டாக்டர்.. வர வர என் பொண்டாட்டிக்கு காது கேக்குறது குறைஞ்சுட்டே வர்ற மாதிரி தெரியுது?? என்ன பண்ணலாம்?? டாக்டர்??"ன்ன்னு கேட்டான்..

டாக்டர் சொன்னாரு.. "மொதல்ல ஒரு 15 அடி தூரத்துல இருந்து எதாவது பேசிப்பாரு.. அப்பவும் அவ திரும்பலைன்னா, கொஞ்சம் கிட்டப் போய்ட்டு பேசிப்பாரு.. அப்பவும் திரும்பலைன்னா அவ பின்னாடி போய்ப் பேசிப்பாரு... அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்ன்னு" சொன்னார்..

இவனும் வீட்டுக்கு போய்ட்டு பொண்டாட்டி கிச்சன்ல சமையல் பாத்திரத்தை கழுவிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

இன்னும் கொஞ்சம் கிட்டக்க போய்ட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்.. அவ திரும்பலை..

கடைசியா அவ பின்னாடி போய் நின்னுட்டு, "என்னடி சாப்பாடு இன்னிக்கு?"ன்னு கேட்டான்..

அவ சொன்னா...
.
.
"நாலாவது முறையா சொல்றேன்.. இன்னிக்கு உப்புமா"ன்னு...


ஙே!!!!!
--------------------------------------------------------------------------------------------
புதிதாக ஒரு பள்ளியில் சேர்ந்த சற்றே இளம் வயது ஆசிரியர்
ஒருவர்,

மாணவர்களை பதில் தெரியாத கேள்வி(தட்டானுக்கு
சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்,
அவன் யார்? போல) கேட்டு திணற அடிக்க வேண்டும் என்பதற்காக,

வகுப்பில் நுழைந்தவுடன் மாணவர்களை நோக்கி ,
"சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் 100 கிலோ மீட்டர்
என்றால் என் வயது என்ன? " என்றார்.

ஒரு மாணவன் சற்றும் தாமதியாமல் "32 வயது" என்றான் .

ஆசிரியருக்கோ ஆச்சரியம் தாங்க முடிய வில்லை."எப்படி கண்டுபிடித்தாய்?"என்றார் .


மாணவன் அமைதியாக கூறினான் .

" ஐயா , எங்கள் ஊரில்
ஒரு அரைப் பைத்தியம் இருக்கிறது .
அதற்கு வயது 16 "
-----------------------------------------------------------------------------
ஒருவர் போதையில் தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து
அடியில நின்னுகிட்டு, கம்பத்த தட்டி,.........

ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!

பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :- ஏம்பா, வீட்டுல
யாரும் இல்ல போல இருக்கு!

இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா....

மாடில லைட் எரியுது பாருங்க!




1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை
தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.

2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.

3. உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க போனா காத்தடிக்குது என்று
புலம்புவதை விட்டு விட்டு இரண்டையும் கலந்து போண்டா சுட்டு போனால்
எல்லா சீசனுக்கும் விற்கும்....

4. ரேடியோவை கண்டு பிடித்ததால் மார்கோனிக்கு அந்த பெயர் வரவில்லை. அவர்கள்
அம்மா அப்பா மார்கோனி என்று பெயர் வைத்ததே அதற்கு காரணம்.

5. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான்.மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி
ஊத்துவான்.

6. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு
சவுரி என பெயர் வந்தது.

7. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆனால் நாய்க்கு தெரியாது.
ஏனெனில் நாய்க்கு படிக்க தெரியாது.

8. நாய் நாக்கை பயன்படுத்தாமல் வாலை பயன்படுத்தினால் அதற்கு நிறைய
நண்பர்கள் இருப்பார்கள்.

9. ஜலதோஷம் பிடித்திருக்கும் கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது. எல்லாக்
கழுதைகளும் எப்போதும் ஜலதோஷத்துடனே இருக்கின்றன.






1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர்.

9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

Wednesday, December 25, 2013

இன்று 9-ம் ஆண்டு சுனாமி நினைவு நாள்.!

 இன்று 9-ம் ஆண்டு சுனாமி நினைவு நாள்.!

சுனாமி பேரலைக்கு ஆருயிர்களை பறிகொடுத்த 9-ம் ஆண்டு நினைவு தினம்





சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையின் ருத்ரதாண்டவத்தால் ஏராளமான உயிர்களை கடல் விழுங்கிய 9-ம் ஆண்டு நினைவு தினம், நாளை (வியாழக்கிழமை) தமிழக கடற்கரைகளில் மறக்க முடியாத துயர நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகிறது. இது ஆவேசமாக கரையை தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் திடீரென ஏற்பட்ட பூகம்பத்தால் நம் நாட்டில் ஆந்திரா, புதுச்சேரி மற்றும் நம் தமிழகத்தின் சென்னை, நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்களில் ஒரு பனைமரம் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி கடற்கரை பகுதியை தாக்கின.

சுனாமியின் கோரதாண்டம் 6 ஆயிரத்திற்கு மேலான மனித உயிர்களை பறித்துக்கொண்டதுடன், கோடிக்கணக்கான மதிப்பிலான மீனவர்களின் உடைமைகளும் சேதமடைந்தன.

சுனாமி தாக்குதல் நடந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. தலைமுறை தாண்டியும் இந்த சோகச்சுவடுகள் என்றும் மறையாது. நீங்காத நினைவுகளோடும் நீர்வழியும் விழிகளோடும் கனத்த இதயத்தோடும் பறிகொடுத்த தங்கள் உதிர உறவுகளை நினைத்து வேளாங்கண்ணி போன்ற ஒரு சில இடங்களில் உள்ள நினைவுச்சின்னங்களில் மக்கள் ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினமாக டிசம்பர் 26-ந்தேதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இன்று 9-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி, கடலூர், வேளாங்கண்ணி கடற்கரை பகுதிகளிலும் மற்றும் சென்னையில் மெரினா கடற்கரை, காசிமேடு கடற்கரை, பட்டினப்பாக்கம், அயோத்தியா நகர், காஞ்சீபுரம் மாவட்டம் சதுரங்கப்பட்டினம் மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் பலர் கடலுக்கு மெழுகுவர்த்தி மற்றும் அகல்விளக்கு ஏந்தி சென்று பால் ஊற்றி, மலர் தூவி சுனாமியில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

மீனவர்களும் தங்கள் பங்குக்கு மீன்பிடிக்க செல்லாமல் கடல் அன்னைக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

இனியும் சுனாமிக்கு இந்திய மனித உயிர்களை பலியிட நாம் தயாராக இல்லை. எனவே நம் கடல் பகுதிகளில் அதிகளவு சுனாமி மிதவை கருவியை அமைத்து வரும் காலத்திலாவது சுனாமியிலிருந்து மனித உயிர்களையும், சொத்துக்களையும் காக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.