Monday, September 16, 2013

மடிக்கணினிகளின் மின்கலங்கள் நீண்ட காலம் உழைப்பதற்கு பின்பற்ற வேண்டியவை!

மடிக்கணினிகளின் மின்கலங்கள் நீண்ட காலம் உழைப்பதற்கு பின்பற்ற வேண்டியவை!

லேப்டாப் கம்ப்யூட்டர் இன்று நம்பிக்கைக்குரிய தோழனாக உருவெடுத்துள்ளது. நாம் எங்கிருந்தாலும், அது சந்தையாக இருந்தாலும், விமான நிலையத்தின் ஓய்வு அறையாக இருந்தாலும், நம் வர்த்தக நடவடிக்கைகளை, அலுவலகப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய நல்ல ஆயுதமாக, நம் லேப்டாப் கம்ப்யூட்டர் உருவெடுத்துள்ளது.

ஆனால், இந்தப் புகழ் மாலை எல்லாம், லேப்டாப்பின் பேட்டரி உயிர்த்துடிப்போடு, மின் சக்தியை வழங்கும் வரை தான். அனைத்து தகவல்களையும் வரிகளில் அமைத்து, பிரசன் டேஷன் ஸ்லைடுகளை அமைக்க இருக்கையில், “லோ பவர்’ என்று ஓர் எச்சரிக்கை கொடுத்து, லேப்டாப் முடங்கிவிடும்.

சுற்றிலும் எந்த இடத்திலும், மின் சக்தியை வழங்கும் ப்ளக் பாய்ண்ட் இருக்காது. அப்போதுதான், அடடா! ஏன் தான் இதனை வாங்கிப் பயன்படுத்தினோமோ என்று லேப்டாப் கம்ப்யூட்டரை வசை பாடத் தொடங்குவோம். ஆனால், பவர் மீண்டும் கிடைத்தவுடன், மீண்டும் அன்பும், பாராட்டும் நம் மனதில் அருவியாய்க் கொட்டும். சற்று முன் வந்த தலைவலி, காணாமல் போயிருக்கும்.

இந்த தலைவலி வராமல் இருப்பதற்கான மருந்து எங்கே உள்ளது? லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரியை நன்கு பராமரித்து வந்தால், நிச்சயம் தலைவலி வராது. பேட்டரியை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் எனச் சில அடிப்படை வழிகளை இங்கு காணலாம்.

1. மின் இணைப்பு தரவும்:

எப்போதெல்லாம் இயலுமோ, அப்போதெல்லாம், லேப்டாப் கம்ப்யூட்டரை மின் சக்தி வழங்கும் ப்ளக் பாய்ண்ட்களில் செருகவும். எப்போதும் முழுமையான சார்ஜ் இருக்கும் வகையில், லேப்டாப்பின் பேட்டரிக்குத் தீனி போட்டுவிட்டால், நம் கம்ப்யூட்டர் நம்மைக் கைவிடாது.

உங்கள் பவர் சார்ஜர் போல இன்னொன்றினைக் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டால், ஒன்றை அலுவலகத்திலும், மற்றொன்றை செல்லும் இடங்களிலும் பயன்படுத்தலாம். அடிக்கடி வீட்டில் நீங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அங்கு வைத்துப் பயன்படுத்தவும் ஒன்றினை உபரியாக வைத்திருக் கவும்.

தொடர்ந்து மின்சக்தி வழங்கும் இணைப்புகளில் தொடர்பினை ஏற்படுத்தி வைத்தால், பேட்டரியின் வாழ்நாள் குறைந்துவிடும்; பேட்டரியின் வெப்ப நிலை அதிகமாகி வீணாகத் தொடங்கும் என்ற உண்மைக்கு மாறான எண்ணத்தினை நீங்கள் கொண்டிருந்தால், அதனை நீக்கிவிடுங்கள்.

இப்போது கிடைக்கும் பேட்டரிகள், குறிப்பாக லித்தியம் அயன் பேட்டரிகள். தாங்கள் முழுமையாக சார்ஜ் ஆனவுடன், மின்சக்தியைப் பெறுவதனைத் தாங்களாகவே நிறுத்திக் கொள்ளும் திறன் கொண்டவை. எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்திருப்பது, பேட்டரியின் திறனை அதிகப்படுத்தவே செய்திடும்.

2. திரையில் ஒளி அமைப்பை குறைத்திட:

லேப்டாப் கம்ப்யூட்டரின் திரையின் ஒளித்திறன் வெளிப்பாட்டை எப்போதும் குறைவாகவே வைத்திருக்க வேண்டும். இப்போது எல்.இ.டி. பேக் லைட்ஸ் கொண்ட திரைகளே லேப்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படுகின்றன. முன்பு சி.ஜி.எப்.எல். (CCFL cold cathode fluorescent tube) இருந்த இடத்தில் இவை இடம் பெற்றுள்ளன.

இருப்பினும், லேப்டாப் திரையின் ஒளி வெளிப்பாடு, அதன் பேட்டரியின் வாழ்நாள் நீட்டிப்பில் முக்கிய இடம் கொண்டுள்ளது. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின் சக்தியில் பெரும் அளவு திரையின் ஒளி வெளிப்பாட்டிற்குச் செலவாகக் கூடாது. எனவே ஒளி வெளிப்பாட்டினைக் குறைவாகவே வைத்து இயக்க வேண்டும்.

மேலும், லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து பணி புரியும் இடத்தினையும் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அறையில் அதிக அளவில் வெளிச்சம் கொடுக்கும் விளக்குகள் உள்ள இடத்தைக் காட்டிலும், குறைவான வெளிச்சம் உள்ள இடத்தில், லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து இயக்குவதே நல்லது.

திரை ஒளி வெளிப்பாடு எடுத்துக் கொள்ளும் மின்சக்தியைக் குறைத்திட, விண்டோஸ் சிஸ்டம் வழங்கும், தானாக இயங்கும் பேக் லைட் கண்ட்ரோல் டூலைப் பயன்படுத்தலாம். இதற்குக் கண்ட்ரோல் பேனல் சென்று, Hardware and Sound > Power Options எனத் தேர்ந்தெடுக்கவும்.

இதில் ஆக்டிவ் பவர் பிளான் தேர்ந்தெடுக்க, Change plan settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். �Dim the display� மற்றும் �Turn off the display� என்பதன் கீழ், 1 முதல் 3 நிமிடங்கள் என்ற கால வரையறையை அமைக்கவும்.

லேப்டாப் கம்ப்யூட்டர் பேட்டரி சக்தியில் இயங்குகையில், திரை ஒளியை மட்டுப்படுத்தி அல்லது முழுவதுமாக நிறுத்தி பேட்டரியின் சக்தியைப் பாதுகாக்கும். Change advanced power settings என்பதில் கிளிக் செய்து, ஒளி வெளிப்பாட்டின் ஒளி எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம்.

3. தவறான அப்ளிகேஷனை கண்டறிய:

பேட்டரியின் சக்தியினை அதன் வாழ் நாளுக்கு முன்னரே, முடக்கிப் போடுவதில், தவறான இயக்கத்தைக் கொண்டிருக்கும் புரோகிராம்களாகும். இவை ப்ராசசரின் உழைப்புச் சுற்றினைத் தேவையற்ற அளவில் மிகுதியாக மேற்கொள்ளும். இதனால், அதற்கேற்ற வகையில் மின்சக்தி வீணாகச் செலவழியும்.

அதே போல, கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில், தேவையில்லாமல் இயங்கும் புரோகிராம்களும், கிராஷ் ஆகி நிற்கும் அப்ளிகேஷன்களும் மின் சக்தியினை வீணாக்கும். இணைய பிரவுசர் அப்ளிகேஷன்கள் இந்த வகையில் அடிக்கடி முடங்கிப் போய், மின் சக்தியினை வீணாக்கும். ஏனென்றால், பிரவுசர்களில் உள்ள அதிகமான ப்ளக் இன் புரோகிராம்கள் மற்றும் பிரவுசரில் பதியப்பட்டிருக்கும் ஸ்கிரிப்டிங் இஞ்சின்கள் இந்த வகையில் தொல்லை கொடுப்பதாக அமைகின்றன.

நவீன சி.பி.யு.க்கள், தானாகவே, தங்களின் செயல்பாட்டிற்கான க்ளாக் ஸ்பீடை, மிகக் குறைந்த அளவிற்கு மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவையாக உள்ளன. ஆனால், அப்ளிகேஷன் புரோகிராம் எதுவும் செயல்படாமல் இருக்கும் நிலையிலேயே, இந்த செயல்பாட்டினை சி.பி.யு.க்கள் மேற்கொள்ளும்.

வெட்டித்தனமான புரோகிராம்களை முடக்கி வைக்கவில்லை என்றால், அவை பேட்டரியின் திறனைத் தேவையற்ற வகையில் குறைப்பதனைத் தடுக்க இயலாது. லேப்டாப்பில் உள்ள வெப்பம் வெளியேற்றப் பயன்படும் சிறிய மின்விசிறிகள் திடீர் திடீர் எனத் தங்களின் வேகத்தினை அதிகப்படுத்தினால், அவை வீணாக இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களால் தான் எனக் கொள்ளலாம்.

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது மிக எளிது. Ctrl Alt Delete கீகளை ஒரு சேர அழுத்தவும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரை இயக்கவும். இதில், தேவையின்றி, அதிக மின்சக்தியையும், ப்ராசசரின் செயல்பாட்டு வேகத்தினையும் பயன்படுத்தும். இவற்றை அடையாளம் கண்டு நிறுத்த வேண்டும். பின்னர் நீக்க வேண்டும்.

ஒரு புரோகிராம் வழக்கமான முறையில் நிறுத்தப்பட இயலவில்லை எனில், அதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில், Kill Process என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். என்ன செய்தும், புரோகிராம்கள் மட்டுப்படவில்லை எனில், கம்ப்யூட்டர் சிஸ்டத்தினை ரீ ஸ்டார்ட் செய்வதே ஒரே வழி.

4. பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள்:

பேட்டரி சக்தியில் இயங்குகையில், லேப்டாப் இயக்கத்தின் பின்னணியில் செயல்படும் தேவையற்ற புரோகிராம்களை நிறுத்திவிடலாம். குறிப்பாக கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்கையில், பல புரோகிராம்கள் ப்ராசசரின் சக்தியைப் பயன்படுத்தி, இணைய தளங்களைத் தொடர்பு கொண்டு, பெரிய அளவிலான அப்டேட் புரோகிராம்களை டவுண்லோட் செய்து கொண்டிருக்கும். இவை பேட்டரியின் சக்தியை வீணடிக்கும் என்பதால், இவற்றை நிறுத்திவிடலாம்.

5. தேவையற்ற சாதனங்கள்:

லேப்டாப் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள, பயன்படுத்தாத சாதனங்களை நீக்கிவிடலாம். உள்ளாக இணைந்த மோடம், வை-பி, புளுடூத் போன்றவை பயன்படுத்தப்படவில்லை எனில், செயல்பாட்டினை நிறுத்தி வைக்கலாம்.

மேலே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை நாம் மிக எளிதாக மேற்கொண்டு, பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்கலாம். திடீரென பேட்டரியின் செயல் இழப்பால், நாம் லேப்டாப் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் பணிகள் பாதிக்கப்படாமல் இதன் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment