Thursday, February 12, 2015

மகாபாரதம்....

மகாபாரதம் முதல் பகுதி:




ராமபிரான் சூரியவம்சத்தில் அவதரித்தது போல, பஞ்ச பாண்டவர்கள் சந்திர குலத்தில் பிறந்தவர்கள். பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த போது, தோன்றியவன் சந்திரன்.

14 கலைகளைக் கொண்ட இவன், தினமும் ஒன்றாக சூரியனுக்கு கொடுப்பான். திரும்பவும் அதை வாங்கிக் கொள்வான். சுட்டெரிக்கும் சூரியன், இவனிடம் பெறும் கலையால் குளிர்ந்து தான் உலகத்தை எரிக்காமல் வைத்திருக்கிறான். இவன் தாரை என்பவளைத் திருமணம் செய்து பெற்ற மகனே புதன். ஒரு முறை மநு என்ற அரசனின் மகனான இளை என்பவன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். இந்தக் காட்டின் ஒரு பகுதியிலுள்ள குளத்தில், ஒருசமயம் சிவபெருமானின் மனைவியான பார்வதி நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஆடவர் சிலர், அவள் குளிக்கும் அழகை ரசித்தனர். கோபமடைந்த பார்வதி அவர்களைப் பெண்ணாகும்படியும், இனி அந்த ஏரிப்பகுதிக்குள் யார் நுழைகிறார்களோ, அவர்கள் பெண்ணாக மாறுவர் என்றும் சபித்துவிட்டாள். அவள் பூவுலகை விட்டு, சிவலோகம் சென்ற பிறகும் கூட அந்த சாபம் மாறவில்லை. இதையறியாத இளன் அந்த ஏரிப்பகுதிக்குள் நுழைந்தானோ இல்லையோ, பெண்ணாக மாறி விட்டான்.

அவள் வருத்தத்துடன் இருந்த வேளையில், அழகுப் பதுமையாக இருந்த அவளை அங்கு வந்த புதன் பார்த்தான். அவளது கதையைக் கேட்ட புதன், அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு இளை என்ற பெயர் ஏற்பட்டது. புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்ற மகன் பிறந்தான். புரூரவஸ் வாலிபன் ஆனான். அழகில் அவனுக்கு இணை யாருமில்லை. ஒருமுறை வான்வெளியில் ஒரு பெண்ணை சில அசுரர்கள் கடத்திச் செல்வதைப் பார்த்தான். அவள் தன் மானத்தைக் காத்துக் கொள்ள கதறினாள். பறக்கும் தேர் வைத்திருந்த புரூரவஸ், அவளைக் காப்பாற்றுவதற்காக மின்னல் வேகத்தில் விண்வெளியில் பறந்து சென்றான். அசுரர்களை எதிர்த்து உக்கிரத்துடன் போரிட்டான். அசுரர்கள் அவனது தாக்குதலை தாங்க முடியாமல், ஓடிவிட்டனர். அப்பெண்ணை பார்த்தான். அப்படி ஒரு அழகு... கண்ணே! நீ தேவலோகத்து ஊர்வசியோ? என்றான். அவள் வெட்கத்துடன் தலை குனிந்து, நான் நிஜமாகவே ஊர்வசி தான். என் மானம் காத்த நீங்களே எனக்கு இனி என்றும் பாதுகாவலாக இருக்க வேண்டும், என்றான். ஊர்வசியே தனக்கு மனைவியாகப் போகிறாள் என்று மகிழ்ந்த புரூரவஸ், அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவர்களது இனிய இல்லறத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

ஆயு என்று அவனுக்குப் பெயரிட்டனர். இப்படியாக சந்திர வம்சம் பூமியில் பெருகியபடி இருந்தது. ஆயுவிற்கு நஹுஷன் என்ற மகன் பிறந்தான். இவன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து தேவலோகத்தையே பிடித்துக் கொண்டவன். தேவலோக மன்னனான இந்திரனை விரட்டிவிட்டு, அரசனாகி விட்டான். அதிகார மமதையுடன், காம போதையும் சேர, இந்திரலோகத்தை ஜெயித்ததால், இந்திரனின் மனைவியான இந்திராணியும் தனக்கே சொந்தம் என அவளை ஒரு அறையில் அடைத்து விட்டான். இந்திராணியோ அவனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டாள். ஒருநாள் போதை உச்சிக்கேற, அவளை வலுக்கட்டாயமாக அடைவதற்காக தன் பல்லக்கில் ஏறி புறப்பட்டான் நஹுஷன். பல்லக்கை சுமக்கும்படி முனிவர்களை மிரட்டினான். முனிவர்களும் தூக்கிச் சென்றனர். அந்த முனிவர்களில் ஒருவர் அகத்தியர். அவர் குள்ளமாக இருந்ததால், மற்றவர்களைப் போல் வேகமாகச் செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நஹுஷன், ஓய்! மற்றவர்கள் வேகமாகச் செல்லும் போது, உமக்கு மட்டும் என்னவாம்! என்று, முதுகில் ஓங்கி மிதித்தான். அகத்தியர் மகாதபஸ்வியல்லவா! அவருக்கு கோபம் வந்து விட்டது. சிறுவனே! அதிகார மமதை, காமபோதைக்கு ஆட்பட்டு, தபஸ்விகளை துன்புறுத்தினாய். மேலும், வயதில் பெரியவர்களை மதியாமல், காலால் மிதித்தாய். எனவே நீ பாம்பாகப் போ, என சாபமிட்டார். அவன் பாம்பாக மாறி, தேவலோகத்தில் இருந்து பூமியில் விழுந்தான்.





தொடரும்.

courtasy ..தமிழில் மகாபாரதம்..

மகாபாரதம்..

 

மகாபாரதம்


மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.
நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.
இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.

தோற்றம்

இதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கிமு 8ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிபி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.
இவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.

"மகாபாரதம்" என்னும் நூல் தலைப்பு, "பரத வம்சத்தின் பெருங்கதை" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே "பாரதம்" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது "மகாபாரதம்" என அழைக்கப்பட்டது.

பென்சிலின் உருவான கதை.....


பென்சிலின் உருவான கதை.
---------------------------------------------


தற்செயலாக பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் பென்சிலின். மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்ததும்தான், நியூட்டன் புவி ஈர்ப்பு விசையையே கண்டுபிடித்தார். அதேபோல் தான் அலெக்சாண்டர் பிளமிங்கும் பென்சிலினைக் கண்டறிந்தார். அந்த சுவையான சம்பவத்தைப் பற்றிப் பார்ப்போமா.

பிளமிங், 1881ல் ஸ்காட்லாந்தில் பிறந்தார். முதலாம் உலகப் போரின் போது படை வீரர்கள் பலர் காயமடைந்து தொற்றுநோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு இறந்தனர். இதைக் கேள்விப்பட்டு ஹபாக்டீரியாவைக் கொல்லும் மருந்தைக் கண்டுபிடிப்பேன்’ என்று சபதம் கொண்டார் பிளமிங்.

1928ல் லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையில் ஒரு விடுமுறை நாளில் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அன்று விடுமுறை நாளாக இருந்ததால் ஆய்வுப் பொருட்களை அப்படியே வைத்துவிட்டுச் சென்றார். அதில் ஒரு தட்டு மூடாமல் இருந்தது. சுற்றுப்புறமும் அசுத்தமாக இருந்தது. அப்போது வீசிய காற்றால் மெல்லிய பூஞ்சணம் அந்த தட்டில் படித்திருந்தது.

சில நாட்கள் கழித்து அந்த தட்டை ஆராய்ந்து பார்த்தார் பிளமிங். அப்போது பூஞ்சணம் படிந்த இடத்தில் கிருமிகள் முழுவதும் அழிந்திருந்தன மற்ற பகுதியில் பெருகி இருந்தன, உடனே பிளமிங் அந்த பூஞ்சணத்தைப் பயன்படுத்தி ஒரு மருந்து தயாரித்தார். பூஞ்சணத்தின்பெயர் பென்சிலினா நோடேடம். அதனால், அந்த மருந்துக்கு பென்சிலின் என்று பெயரிட்டார்.

இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் பிளமிங் ஒரு நவீன ஆய்வு கூடத்துக்குச் சென்றார். அங்கே ஆய்வுக் கருவிகள் பளபளப்பாகவும், தூய்மையாகவும் இருந்தன. சுற்றுச் சூழல் தூசியற்றும் குளிரூட்டப்பட்டும் இருந்தது.

அப்போது ஒருவர் ‘உங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை. ஒரு தரமான ஆய்வகம் கூட உங்களுக்குக் கிடைக்கவில்லையே? அப்படி கிடைத்தால் நீங்கள் இன்னும் நிறைய மருந்துகளைக் கண்டுபிடித்திருப்பீர்களே’ என்று சொன்னார். அதற்கு பிளமிங் அமைதியாக, ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், நிச்சயமாக பென்சிலினைக் கண்டுபிடித்திருக்க மாட்டேன்’ என்றார்.

Friday, February 6, 2015

காந்தி கணக்கு என்றால் என்ன?!!

காந்தி கணக்கு என்றால் என்ன?

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.

அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு.

ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்..

Monday, February 2, 2015

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்...


திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்...


திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும். திருநெல்வேலி பெயர்க் காரணம் இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.

ிருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது 'திருநெல்வேலி அல்வா'தான். இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான். திருநெல்வேலிக்கு வருபவர்கள் அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள் என்பது தனிச் சிறப்பு. திருநெல்வேலியை நெல்லை என்றும் அழைப்பர்.

அம்பாசமுத்திரம்

கோயில்கள் நிறைந்த ஊர். காசி விஸ்வநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில், கிருஷ்ணர் கோயில், புருசோத்தம பெருமாள் கோயில், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் என்று நிறையக் கோயில்கள் இங்கு உள்ளன.

ஆத்தங்கரை பள்ளிவாசல்

நெல்லையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் இந்தப் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது இருவருக்கும் இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன. இவர்கள் இருவரும் சூஃபி ஞானிகள், அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் இடம் இது.

அய்யனார் சுனை

நாட்டார் தெய்வமான அய்யனார் கோயிலோடு இயற்கையான சுனையும் அமைந்த இடம். அருகில் சந்தனக்காடும் உள்ளது. பார்க்கச் சிறந்த இடம்.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

நெல்லையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது. டிசம்பர் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்கும். சுமார் 35 வகைப் பறவைகள் இவ்வாறு வலசை வந்து ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. மிக முக்கியமான பறவைகள் சரணாலயமாக இது இருந்து வருகிறது.

குற்றாலம்

பெயரைச் சொல்லும் போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது.

குற்றால அருவிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

குற்றாலத்தின் பெரிய அருவி தவிர சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. எல்லா அருவிகளுக்கும் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. இந்த அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகைக் குணம் கலந்திருப்பதால் இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

குற்றாலநாதர் கோயில்

பெரிய அருவியின் பக்கத்தில் கோயில் கொண்டுள்ளார் குற்றாலநாதர். திரிகூட ராசப்ப கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியின் நாயகன் இவர்தான்.

மாவட்ட அறிவியல் மையம்

தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள நாட்டின் மிக முக்கியமான அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையுடன் இணைந்த தேசிய அறிவியல் காட்சி சாலைகள் கழகத்தின ஒரு பிரிவு

எச்சரிக்கை...

#‎எச்சரிக்கை‬
தாய் தமிழ் உறவுகளுக்கு மன வேதனையுடன்
என்னைப் போன்ற நாம் தமிழர் பிள்ளைகளுக்கு எங்களின் நலனை விட இனத்தின் நலனே முக்கியம் என்று அதிலும் நான் ஈழத்தையும்,தலைவரையும் என் உயிரினும் மேலாக நேசித்து அவர்களை என் உடலிலே சுமந்துகொண்டு திரிபவன்,ஈழத்து உறவுகளை உயிருக்கு இணையாக நேசிப்பவன்,நான் வைத்துள்ளது ஒரு சிறிய பெட்டிக்கடை தான் இருந்தாலும் எந்த போராட்டம்,கூட்டம்,ஆர்ப்பாட்டம் என்றாலும் கடையை அடைத்துவிட்டு இனத்தின் விடுதலைக்கான பயணத்தில் பயணம் செய்வேன்,என் சக்திக்கு மீறி எனது பங்களிப்பை செய்து வருகிறேன்,இப்படி இருக்கும் நிலையில் இங்கு இருப்பவர்கள் பலர் நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள் என்றால் தன்னை ஈழத்து தமிழச்சி என்று சொல்லி பலர் ஏமாற்றுகின்றனர் இதுபோல கடந்த வாரம் அண்ணன் திருச்சி ‪#‎துரைபாண்டியன்‬ சொன்னார் என்பதற்காக அவர் அந்த ஈழத்து அக்கா மீது வைத்த நம்பிக்கையில் என்னிடம் ஒரு பார்சல் வாங்கிவைக்க சொன்னார் தன்னுடைய கணவர் கனடாவில் இருந்தது மருந்து மற்றும் திரவியங்கள் கொடுத்து அனுப்பி உள்ளார் குருவியிடம் 48௦௦பணம் கொடுத்து அந்த அக்கா உன்னிடம் முப்பதாம் தேதி வாங்கிகொள்வார்கள் என்று சொன்னார் உண்மையை சொல்லப்போனால் என்னிடம் அப்போது பணமே இல்லை ஆனால் அண்ணன் சொன்னாரே என்றும் ஈழத்து அக்காவாயிற்றே என்று மாதத்தின் கடைசி நாள் வங்கி கடன் தவணைத் தொகை கட்ட வேண்டிய பணத்தை எடுத்து அந்த பொருளை வாங்கி வைத்து விட்டேன்,பொருளை நான் கூட வாங்கவில்லை என் அப்பாவிடம் பணம் கொடுத்துவிட்டு அப்பாவிடம் குருவி எண் கொடுத்து அந்த பார்சல் வாங்கி வையுங்கள் அப்பா என்று சொன்னேன் அவரும் வாங்கி வைத்து விட்டார்,முப்பதாம் தேதி வந்தது துரை அண்ணனுக்கு அழைத்தேன் அண்ணன் சொன்னார் தம்பி அவர்களிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று பின்பு நீண்ட நேரம் அழைத்தும் யாரும் எடுக்கவில்லை பின்பு அலைபேசி அனைத்து வைக்கப்பட்டது உடனே துரைபாண்டியன் அண்ணன் அந்த பார்சல் பிரித்து பார்க்க சொன்னார் எனக்கு அது தவறு என்று தோணியது பின்பு அண்ணன் சொன்னார் என்று பிரித்து பார்த்தல் அதன் உள்ளே மூன்று கோதுமை பாக்கெட்,உப்பு பாக்கெட் இருந்து பார்த்து அதிரிச்சி அடைந்தேன்,கண் தானாக கலங்கியது, அந்த அக்கா தனிசெய்தில் போய் நான் பேசினேன் எனக்கு அம்மை போட்ட காரணத்தால் சென்னைக்கு வர முடியவில்லை,நீங்கள் உங்கள் வங்கி கணக்கு முகவரி அனுப்புங்க பணம் இட்டுவிடுகிறேன் என்று சொன்னார் நானும் கொடுத்தேன்,கடைசிவரை பணம் போடவில்லை என்னை பிளாக் செய்து விட்டு போய்விட்டார்கள்,இதனால் வங்கி கடன் தவணைத் தொகை கூட கட்ட முடியாமல் திணறினேன்,இந்த ‪#‎bhavani_sree_eelam‬ என்ற பெண்மணி என்னை மட்டும் ஏமாற்றவில்லை,இன்னும் மூன்று பேர் ஏமாந்து உள்ளனர் எனக்கு தெரிந்து இவர்கள் மட்டுமே,இன்னும் தெரியாதவர்கள் எத்தனை நபரோ,இன்னும் இவர்கள் எத்தனை பேர் ஏமாற்ற போகின்றன தெரியவில்லை இனி ஏமாறாமல் இருக்க தான் இந்த பதிவு....
‪#‎அக்கா‬ உட்பட ஈழத்து உறவுகள் உங்களுக்கு உதவி தேவைபட்டால் கேளுங்கள்நாம் தமிழர் பிள்ளைகள் முடிந்த அளவிற்கு செய்கிறோம் குறிப்பாக நான் கடனுக்கு வாங்கியாவுது உங்களுக்கு உதவுவேன் அதைவிட்டுவிட்டு இதுபோன்ற நம்பிக்கை துரோகம் மட்டும் இனி செய்ய வேண்டாம்,மீண்டும் மீண்டும் துரோகத்தால் எங்களை வீழ்த்தவேண்டாம்...
‪#‎தமிழரின்‬ தாகம் தமிழீழ தாயகம்..

நல்ல தம்பி

திருநெல்வேலி வரலாறு...

திருநெல்வேலி வரலாறு

வரலாறு

Hotel image
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. இந்தியாவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 3000 ஆண்டு பழமையான இந்த நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி பழமையான நகரம் என்பதற்கு அரிச்சநல்லூர் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த முதுமக்கள் தாழி சிறந்த சான்றாகும். இந்த தாழியில் சில எலும்பு கூடுகளுடன் பழந்தமிழ் எழுத்துக்களும், உமி, அரிசி ஆகியவையும் இருந்தன. இவற்றை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2800 ஆண்டு பழமையானது என உறுதியளித்தனர். இதன் மூலம் புதிய கற்காலத்தில் இருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்னரே திருநெல்வேலியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. மேலும் ஆராய்வதற்காக அரிச்சநல்லூர் தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.பாண்டியர்கள் காலத்தில் திருநெல்வேலி தென்பகுதியின் தலைநகரமாக விளங்கியது. ஆற்காடு நவாப் மற்றும் நாயக்கர்கள் காலத்தில் இது முக்கிய வர்த்தக நகரமாக இருந்தது. அவர்கள் திருநெல்வேலியை நெல்லை சீமை என்று அழைத்தனர்.

பாண்டியர்கள் ஆட்சிக்கு பின் கி.பி. 900 முதல் 1200 வரைசோழ பேரரசின் முக்கிய நகரமாக திருநெல்வேலி இருந்தது. பின்னர் விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டிலும், நாயக்கர்கள், நவாப்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தது. 1781ம் ஆண்டு ஆற்காடு நவாப்கள் உள்ளூர் நிர்வாகத்தை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர். 1801ம் ஆண்டு திருநெல்வேலியை ஆங்கிலேயர்கள் முழுமையாக கைப்பற்றினர். அதன் பின்னர் இந்தியா சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி புரிந்தனர். ஆங்கிலேயர்களுக்கு திருநெல்வேலி என்பது உச்சரிக்க சிரமமாக இருந்ததால் ஆற்காடு நவாப்கள் 1801ம் ஆண்டு தின்னவேலி என பெயரிட்டனர். ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தில் திருநெல்வேலி ராணுவ தலைமையகமாக இருந்தது. இதன் மூலம் பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் ஒடுக்கினர். இதன் பின்னர் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை இரண்டும், இரட்டை நகரங்களாக வளர துவங்கியது.

திருநெல்வேலி அல்வா நகரம் என்றும் அழைக்கப்பட்டது. திருநெல்வேலி அல்வாவை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அடுத்து, சுவாமி நெல்லையப்பர் காந்திமதி கோயில் பிரசித்தி பெற்றதாகும். திருநெல்வேலி, திருநெல்வேலி டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என்று மூன்று நிர்வாக மையங்களாக செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மக்கள் தொகை, வருவாய் ஆகியவற்றை கொண்டு 1999ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி பிறநகரங்களுடன் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை, கன்னியாகுமரி, கொல்லம், கேரளாவுடன் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார் (தூத்துக்குடி) போன்றவர்கள் திருநெல்வேலியை சேர்ந்தவர்களாவர். 1990ம் ஆண்டிற்கு முன் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்திற்குள் இருந்தது.

பெயர் காரணம் : முற்காலத்தில் வேதபட்டர் என்ற சிவபக்தர் ஒருவரின் பக்தியை சோதிக்க நினைத்த சிவ பெருமான் அவருக்கு வறுமையை உண்டாக்கினார். ஒருநாள் அவர் பல வீடுகளில் இருந்து பிச்சை பெற்ற நெல்லை சூரியஒளியில் காய வைத்து விட்டு நதியில் நீராட சென்றார். நீராடி, கடவுளிடம் மழை தருமாறு வேண்டினார். பக்தரின் வேண்டுதலுக்கு உடனடியாக செவிசாய்த்த இறைவன் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்ய செய்தார். அப்போது தான் பக்தருக்கு நெல்லை காயவைத்தது நினைவிற்கு வந்தது. நெல் நனைந்து விடுமே என வேகவேகமாக திரும்பியவருக்கு மிகவும் ஆச்சரியமடைந்தார். மழை நெல் காயவைத்திருக்கும் பகுதியை தவிர பிற இடங்களில் பெய்தது. நெல்லை வேலி போல் காத்து பிற இடத்தில் மழை பெய்ததால் திருநெல்வேலி என்ற பெயர் வந்தது.

திருநெல்வேலி, நெல்லை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலியின் சாட்டிலைட் படத்தில் நகர் சுற்றி நெல்வயல்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த நகரத்திற்கு திருநெல்வேலி என்ற பெயர் வந்ததாக கூறுவதுண்டு. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியால் நகரம் செழிப்புடன் காணப்படுகிறது.

போக்குவரத்து பஸ் : திருநெல்வேலியில் பிறநகரங்களை இணைக்கும் சாலை வசதி உள்ளது. மதுரை, கன்னியாகுமரி, கொல்லம், கேரளாவுடன் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வெய்ந்தாங்குளத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் வெளியூர் பஸ்கள் கிடைக்கும். இந்த பஸ் நிலையம் 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூர் மற்றும் மாநிலத்தின் பிற நகரங்களுக்கும் பஸ் கிடைக்கிறது. உள்ளூர் பஸ் போக்குவரத்திற்கு பொளை பஸ்நிலையம், திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் பஸ் கிடைக்கும்.

ரயில்வே : தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் திருநெல்வேலி ஜங்ஷனும் ஒன்றாகும். ரயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் உள்ளன. அதில் 3 அகல ரயில் பாதையாகவும், 3 குறுகிய ரயில் பாதையாகவும் உள்ளது. தமிழகத்தின் பிற நகரங்களுக்கும், கொல்கத்தா, கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து செல்ல ரயில் வசதி உள்ளது.

விமான நிலையம் : திருநெல்வேலியில் இருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில், வாகை குளம் என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது. மேலும் மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களாகும். திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறில் உபயோகிக்கப்படாத ரன்வே உள்ளது. தூத்துக்குடியில் இருந்து ஏர்டெக்கான் நிறுவனம் மட்டும் சென்னை செல்வதற்கான விமான சேவையை தினமும் ஒரு முறை வழங்கி வருகிறது.

கல்வி: நெல்லையின் முக்கிய கல்வி மையமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் விளங்குகிறது. இந்த பல்கலைகழகம் நெல்லை ஜங்ஷனில் இருந்து 11கி.மீ தொலைவில் உள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக அண்ணா பல்கலைகழகத்தின் கிளை இங்கு அமைக்கப்பட உள்ளது. மேலும் நெல்லையில் அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவ, கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. திருநெல்வேலி மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி ஆகியவை தமிழக அரசினால் நடத்தப்படுபவையாகும். செயின்ட் சேவியர், செயின்ட் ஜான்ஸ், சாராடெக்கர், எம்.டி.டி. இந்து கல்லூரி மற்றும் சதகதுல்லா அப்பா கல்லூரி ஆகியவை அனைவராலும் அறியப்பட்ட கல்லூரிகளாகும்.

அல்வா : திருநெல்வேலி அல்வா என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. மதுரை மல்லிகை போல திருநெல்வேலி அல்வா மிகவும் புகழ் பெற்றதாகும். கோதுமை, சர்க்கரை, நெய் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு தாமிரபரணி நீரினால் நல்ல சுவையளிக்கிறது. இங்குள்ள இருட்டு கடை அல்வா மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் லட்சுமி விலாஸ், சாந்தி ஸ்வீட்ஸ் ஆகியவை அல்வாவிற்கு பெயர் பெற்றவையாகும். நெல்லையப்பர் கோயிலை சுற்றிலும் அல்வா கடைகள் நிறைந்து உள்ளன.

உணவு: நெல்லையில், சொதி, கூட்டாஞ்சோறு, உளுந்து சோறு, எள்ளு துவையல் போன்றவை இங்குள்ள மக்களின் முக்கிய உணவாகும். சொதி என்பது தேங்காய் பால், காய்கறிகளை சேர்த்து செய்வதாகும்.

தொழில் வளர்ச்சி: நெல்லையில் சிமென்ட் தொழிற்சாலை, பஞ்சாலை, நூற்பாலை போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் பீடி கம்பெனிகள், ஸ்டீல் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. சிறிய அளவிலான தொழிற்சாலைகள் இங்கு நிறைந்து காணப்படுகிறது.

பிரச்னைகள்: தமிழகத்தின் முக்கிய நகரமான நெல்லையில் போதிய தொழில் வளர்ச்சியின்மையால் இங்குள்ள மக்கள் சென்னை கோவை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மேலும் உயர்கல்வி நிறுவனங்கள் இங்கு போதிய அளவில் இல்லை. இதனால் இங்கு தொழில் வளர்ச்சி குறிப்பிடும் படியாக இல்லை.

பாளையங்கோட்டை: திருநெல்வேலியின் மற்றொரு நகரம் பாளையங்கோட்டை ஆகும். தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. பாளையங்கோட்டை, அங்குள்ள கல்வி நிலையங்களால் பெயர் பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என இந்த நகரம் அழைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்பே இங்கு பல கல்வி நிலையங்கள் இருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய பள்ளிகள், கல்லூரிகள் இங்குதான் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரி, அரசு சித்தமருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, சாராடெக்கர் கல்லூரி ஆகியவை பாளையங்கோட்டையில் உள்ளது. மேலும் இந்த நகரம் தென்னிந்தியாவின் முக்கிய கிறிஸ்தவ மத அமைப்புகளுக்கான மையமாகும். இங்குள்ள ஹோலி டிரினிடி கதீட்ரல் சர்ச் தென்னிந்தியாவின் முக்கிய திருச்சபையாகும். கோபாலசுவாமி கோயில் , சிவன் கோயில், ராமர் கோயில், உச்சினி மாகாளி கோயில் போன்ற பல்வேறு இந்து கோயில்களும் இங்கு காணப்படுகிறது.

அண்ணா மைதானம், வ.உ.சி மைதானம் ஆகியவை மாவட்ட, மாநில அளவிலான கபடி, ஹாக்கி விளையாட்டுகள் நடைபெறும் இடமாகும். சுதந்திர தின, குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் இங்கு நடைபெறும். மேலும் மத்திய சிறைசாலை பாளையங்கோட்டையில் உள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த சிறையில் பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் பலர் அடைக்கப்பட்டிருந்தனர்.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி : மத்திய, மாநில அரசுகள் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை அமைப்பதற்காக முயற்சிகள் எடுத்து வருகின்றன. விரைவில் பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் திருநெல்வேலியில் அமைய உள்ளது.