Monday, September 30, 2013

பெட்ரோல் சிக்கனம்




பெட்ரோல் சிக்கனம்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நெருப்பு பாதையை கடந்து கொண்டு இருந்தால், நிற்காதே, ஓடிக்கொண்டே இரு, அந்த பாதையை கடக்கும் வரை உன் ஓட்டம் நிற்கக்கூடாது. அதே போலத்தான், இந்தியா ஒரு சிக்கலான பாதை, அதுதான் பொருளாதார சரிவு, ரூபாய் மதிப்பின் சரிவு என்ற நெருப்புப் பாதையை கடந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் நிற்காமல் அனைத்து நடவடிக்கைகளையும், அரசாங்கங்களும் எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
அன்னிய செலாவணி அதிகமாக நாட்டைவிட்டு சென்று கொண்டிருப்பதால்தான், தற்போதைய நிலையை உருவாக்கிவிட்டது. அன்னிய செலாவணியை அதிகமாக விழுங்குவது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களும், தங்கமும்தான். தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்க இறக்குமதி வரியை கணிசமாக அரசு உயர்த்தியுள்ளது. ஆனால், பெட்ரோலிய பொருட்கள் அத்தியாவசிய பொருளாகும். சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு கணிசமாக குறைக்கலாமே தவிர, நிறுத்திவிடமுடியாது. அந்த வகையில், மத்திய அரசாங்கம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் நாளை முதல் 6 வாரகாலத்துக்கு ரூ.45 கோடி செலவில் பெட்ரோல் சிக்கன விழிப்புணர்வு பிரசாரம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படப்போகிறது. பெட்ரோலை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்தலாம்? என்பதை அறிவுறுத்தும் வகையிலான இந்த பிரசார பணிகளில், நாட்டில் அதிகமாக மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் இளைய சமுதாயத்துக்கு அந்த செய்தியைக் கொண்டு செல்வதற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பங்களிக்கப்போகிறார்கள். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் மக்களை முறையான டிரைவிங் முறைகளை பயன்படுத்துவது, வாகனங்கள் பராமரிப்பு, ஒரு வாகனத்தில் ஒருவர் மட்டும் பயணம் செய்வதற்கு பதிலாக அதே வழியில், அதே இடத்துக்கு வேலைக்காக, வணிக நிறுவனங்களுக்காக, கல்வி நிறுவனங்களுக்காக செல்பவர்கள் அனைவரும் ‘‘கார் பூலிங்’’ என்று சொல்லப்படும், ஒவ்வொரு நாளும் ஒருவர் காரில் அனைவரும் பயணம் செய்தால், பெட்ரோலை மிச்சப்படுத்தலாம், சிக்னலில் நிற்கும்போது எஞ்சினை ஆப் செய்துவிடவேண்டும் என்பதுபோல ஆலோசனைகளை மத்திய மந்திரி வீரப்பமொய்லி வழங்கியுள்ளார்.

இதெல்லாம் சரிதான். பொதுவாக பெட்ரோல் வீணாக செலவாவதற்கு காரணம் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நின்று கொண்டும், ஊர்ந்துகொண்டும் செல்லவேண்டிய நிலை ஏற்படுவதுதான். பல சாலை மறியல்கள், போராட்டங்கள் காரணமாக போக்குவரத்தை தேவையில்லாமல் இங்கும், அங்கும் திருப்பிவிடுவதும் பெட்ரோல், டீசல் அதிகமாக வீணாவதற்கு ஒரு காரணமாகும்.
அடுத்து அவர் கூறியுள்ள ஆலோசனைகள் உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதாகும். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, பொதுமக்கள் பஸ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும், அரசுகளும் வாரத்தில் ஒரு நாளை பஸ் தினமாக அறிவிக்க வேண்டும், அன்றைய தினம் அனைவருமே பஸ்சில்தான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அரசு அலுவலகங்களின் வேலை நேரத்தை பிரித்து பிரித்து நிர்ணயிக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது மிகவும் நல்ல யோசனையாகும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கான வேலை நேரங்களை தனித்தனியாக பிரித்து நிர்ணயித்துவிட்டால், போக்குவரத்து நெரிசலும் இருக்காது. பஸ்களிலும் எல்லோரும் கூட்டத்தில் சிக்கி செல்லாத நிலையும் இருக்கும், மக்களும் பஸ் பயணத்தை விரும்புவார்கள். நாட்டின் நலன் கருதி இந்த நேரத்தில் பெட்ரோல் சிக்கன நடவடிக்கைகளை அரசு மட்டுமல்லாமல், அனைத்து மக்களும் பின்பற்றவேண்டும், அதற்கு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் உதவவேண்டும். இதற்கு முன்பு எடுக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளால் எவ்வளவு பயன் கிடைத்தது என்பது மக்களுக்கு தெரியவில்லை. எனவே இந்த 6 வார கால விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் மொத்த தேவையில் 3 சதவீதம் அதாவது, ரூ.16 ஆயிரம் கோடிக்கு மேல் எரிபொருள் சிக்கனத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அடையப்பட்டதா? இதனால் என்ன பயன்? மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனரா? என்பதை மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment