Thursday, March 6, 2014

முதல் செல்போன்....

முதல் செல்போன்....

சுமார் 55 வருடங்களுக்கு முன்பு லேண்ட் லைன் தொலை பேசிகள் கூட அதிக அளவு இருந்ததில்லை. மேலும் இந்த காலக்கட்டத்தில் தான் செல்போன் வருகையும் தொடங்கியது. செல்போனைக் கண்டுபிடித்தவர் சிகாகோவைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர். இவர் செல்போன் உலகின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
1956–ல் எரிக்ஸன் நிறுவனம் மிகப்பெரிய வடிவில் ஒரு செல்போனை வடிவமைத்து அறிமுகப்படுத்தியது. இதன் எடை மிக மிக அதிகம். இந்த வகை போனை கார் மற்றும் வாகனங்களில் மட்டும் தான் கொண்டு செல்ல முடியும். இது முதன் முதலில் ஸ்வீடனில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து சுமார் 11 ஆண்டுகள் வரை 125 பேர் மட்டுமே இதன் வாடிக்கையாளர்களாக இருந்தனர். மோட்டோரொல்லா கம்பெனி தான் முதல் நவீன செல்போனை உலகிற்கு காட்டியது. இதன் உரிமையாளரான மார்ட்டின் கூப்பர் 1973ம் வருடம் ஏப்ரல் 3–ந்தேதி உலகின் நவீன செல்போனை கண்டுபிடித்து அதன் மூலம் பேசினார். இவர் என்ஜினீயரிங் படிப்பு முடித்து பொறியாளராக இருந்தாலும், தொழிலதிபராகத்தான் திகழ்ந்தார். முதலில் வயர்லெஸ் போன், ஆண்டனாக்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வந்தார்.
செல்போன் கண்டுபிடிப்புக்கு அடிப்படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை அடுத்துள்ள முர்ரேஹில் என்ற ஊரில் உள்ள பெல் லேபாரட்டரி தான். இந்த நிறுவனத்தினர் வயர்கள் இல்லாத வாக்கி டாக்கி, ரேடியோவை 1947ல் கண்டுபிடித்து ராணுவத்திற்கு வழங்கினர். அப்போது இதன் எடை மிக அதிகமாக இருந்தது. 1960–க்கு பின்பு தான் இவற்றை ஓரளவிற்கு நவீனமாக மாற்றினர்.
அதைதொடர்ந்து 1973–ம் வருடம் மார்ட்டின் கூப்பர் கையில் வைத்து பேசக்கூடிய நவீன உயர்ரக செல்போனை முதன் முதலில் கண்டுபிடித்தார். இந்த போனின் எடை 2 கிலோ மட்டும் தான். கூப்பர் அந்த போனில், தனது போட்டி நிறுவனமான பெல் கம்பெனியின் அதிபர் ஜோயலுக்கு போன் செய்து ஹலோ... நான் மார்ட்டின் கூப்பர் பேசுகிறேன். செல்போனில், அதுவும் உலகின் முதல் நவீன போர்ட்டபிள் செல்போனில் இருந்து நடந்து கொண்டே பேசுகிறேன் என்று நக்கலாய் பேசினாராம்.
கூப்பர் தயாரித்த முதல் நவீன செல்போனை, செங்கல் போன், ஷூ போன் என்று அழைத்தனர். இந்த போனை முழுசாக மின் சார்ஜ் செய்ய 10 மணி நேரமாகும். அதிலிருந்து சுமார் ½ மணி நேரம் மட்டுமே பேச முடியும். இது சரிவராது என்று சொன்னவர்களிடம், கவலைப்படாதீர்கள், இதற்கு மேல் இதை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்றாராம். ஆனால் இன்றைக்கு செல்போன் பேசுபவர்கள் இந்த நேரத்திற்குள்ளாக மட்டுமா பேசுகிறார்கள்?.
சுமார் 40 வருடங்கள் கழித்து தற்போது மிக மிக நவீனமான வகைகளில் புதிய ரக செல்போன்கள் பல்வேறு கம்பெனிகள் தயாரித்து வெளியிட்டு வருகின்றன. அதில் தற்போதைய புதிய ரகம் செல்போனின் சொந்தக்காரர் அதை தவறவிட்ட நிலையில், மற்றவர்கள் அந்த போனை எடுத்து உபயோகிக்க முயற்சித்தால், தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்து விட்டு, தன்னையும் செயல் இழக்க செய்து, யாரும் பயன்படுத்த முடியாத வகையில் வடிவமைக்கப்பட்ட மிக மிக நவீன ரக செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வெளி வந்துள்ளன. இந்த வகை போன்களை போயிங் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

No comments:

Post a Comment