Monday, March 31, 2014

புத்திசாலிகளே... விழிப்புடன் இருங்கள்: இன்று முட்டாள்கள் தினம்.....

புத்திசாலிகளே... விழிப்புடன் இருங்கள்: இன்று முட்டாள்கள் தினம்.....

ஏப்ரல் மாதம் முதல் தேதியை உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் கொண்டாடுகிறார்கள். இன்று காலையிலேயே உங்களை ஏதாவது சொல்லி சிலர் ஏமாற்றக் கூடும்.

அவர்கள் சொல்லும் 'டுபாக்கூர்' தகவல்கள் 100 சதவீதம் அப்படியே உண்மை தான் என்று நம்பும்படியாகவே இருக்கும். அதனை நம்பி, ஏமாந்து விடாதீர்கள்.

சமீப காலமாக, இ-மெயில், எஸ்.எம்.எஸ். மற்றும் இணையத்தளங்கள் மூலமாகவும் ஏப்ரல் 1-ந் தேதியன்று வதந்திகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். ஆகையால், உஷாராக இருப்பது நல்லது.

முட்டாள்கள் தினம் என்பது, எப்போது, எவ்வாறு ஆரம்பமானது? என்பது தொடர்பான, தெளிவான வரலாறு இல்லாத போதிலும், பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் முதல் தேதியே புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562-ம் ஆண்டு வாக்கில், அப்போதைய போப்பாண்டவரான 13-வது கிரகரி பழைய ஜூலியன் ஆண்டுக்கணிப்பு முறையை ஒதுக்கிவிட்டு, புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்.

இதன்படி ஜனவரி 1 அன்று தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்த புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய நாடுகளும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு சில காலம் ஆனது.

பிரான்ஸ் 1582-ம் ஆண்டிலும், ஸ்காட்லாந்து 1660-ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700-ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ம் ஆண்டிலும், இந்த புதிய புத்தாண்டு தினத்தை அரசுபூர்வமாக ஏற்றுக்கொண்டன.

ஆனால், பல ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் காலனி நாடுகளும் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர்.

அத்துடன், நில்லாமல், ஏப்ரல்-1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளை சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர். இதுதான், காலப்போக்கில் ஏப்ரல்-1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்றதொரு நாளை கடைபிடித்ததாக வரலாறு கூறுகிறது.

1508-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதே போல் டச்சு மொழியிலும் 1539-ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றி சொல்லப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. 1466-ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

சில வேளைகளில், ஏப்ரல் 1-ந் தேதியன்று, மக்களை முட்டாளாக்கும் வேலையில் பிரபல நிறுவனங்கள் கூட ஈடுபடுவதுண்டு. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005-ம் ஆண்டில் ஏப்ரல் 1-ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டது.

"மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்" என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதி வைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது. பின்னர் அதை 'சும்மா தமாசு' என்றது, நாசா.

ஆனால் சில நேரங்களில் ஏப்ரல்-1 அன்று காமெடி என்ற பெயரில் சிலர் செய்ய முயன்ற காரியங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

1-4-2003-ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை கொன்றுவிட்டார்கள் என சில இணைய தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச்சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது நினைவிருக்கலாம்.

அதே வேளையில், வரலாற்றில் பல நல்ல விஷயங்களின் துவக்க நாளாக இருந்ததும் இதே ஏப்ரல்-1 தான் என்பதை மறக்கக்கூடாது. காரணம் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கமாக ஏப்ரல்-1 அமைந்திருப்பதால் தொழிலிலும் வணிகத்திலும் ஏப்ரல்-1 வெகு முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

1935 ஏப்ரல் 1-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது. 2004-ல் கூகுளின் மெயில் சேவை தொடங்கப்பட்டது என ஏகப்பட்ட நல்ல விஷயங்களின் தொடக்கம் ஏப்ரல்-1 தான் என்பது நினைவிருக்கலாம்.

வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் மகிழ்ச்சிக்குரிய நாளும் இந்த ஏப்ரல்-1 தான். யோசித்துப் பார்த்தால் முட்டாள்கள் தினத்தன்று தான் பல புத்திசாலித்தனமான நிகழ்வுகளை சரித்திரம் கண்டுள்ளது.

எனவே, இன்றைய நாளை ஏன் முட்டாள்கள் தினமாக பார்க்க வேண்டும்? புத்திசாலிகள் விழிப்போடு இருக்க வேண்டிய நாளாகவும் பார்க்கலாமே..?..!

No comments:

Post a Comment