Thursday, May 8, 2014

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்... ஒரு வேண்டுகோள்!,,,

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்... ஒரு வேண்டுகோள்!

’தேர்வு ஒன்றும் உங்கள் தங்கத்தை உரசிப்பார்க்கும் உரைகல் இல்லை. கனிவோடு காத்திருங்கள்; எல்லாருக்கும் வாழ்த்துகள்

உங்கள் வீட்டுப் பிள்ளைகள், உங்களுக்குத் தெரிந்த பிள்ளைகள் பலரும் தேர்வு முடிவுகளைப் பெறலாம். நிச்சயமாக, தேர்வுகள் வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணம். ஆனால், அதுவே வாழ்க்கை அல்ல என்கிற புரிதல் பெற்றோர், பிள்ளைகள் இருவருக்கும் தேவை.

இந்தத் தேர்வில் வென்று விட்டால், அதுவே இறுதி வெற்றியும் அல்ல; இதில் தோல்வியோ அல்லது தொய்வோ அடைந்துவிட்டால் அதுவும் இறுதி கிடையாது.

இன்னமும் போகவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. அந்தப் புள்ளியிலேயே தேங்கி நிற்பது எதற்கும் உதவாது. தேர்வுகள் மட்டுமே ஒரு திறமைசாலி மாணவனை அடையாளப்படுத்த முடியாது. திறமை என்பதை இதுதான் என நீங்கள் குறிப்பாக வரையறுக்க முடியாது.

கல்வி... பொருளீட்டுவதற்கு என்கிற கருத்தாக்கத்தை பிள்ளைகளின் மனதில் நாம் ஆழமாக விதைத்து பலகாலம் ஆகிவிட்டது. ஆனந்தமாக, விருப்பபட்டு அவர்கள் விரும்புகிற துறையை தேர்வு செய்கிற வாய்ப்பை பெரும்பாலான பெற்றோர் தருவதில்லை. எதிர்காலம் என்னாகுமோ என்கிற பயம் தான் காரணம்; ஆனாலும், கொஞ்சம் அவர்களின் குரலையும் காதுகொடுத்து கேளுங்கள்.

எதிர்வீட்டு அல்லது எதோ ஒரு உறவுக்கார பிள்ளையோடு ஒப்பிட்டு பேசாதீர்கள்; அது காயப்படுத்துமே தவிர, வேறெந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. முகத்தை உம்மென்று வைத்து நரகவேதனையை பிள்ளைகளுக்கு தராதீர்கள். "நடந்துடுச்சு; நீ நல்லாதான் பண்ணினே; விடு, பார்த்துக்கலாம் கண்ணா!" என தலைதடவி சொல்லுங்கள். இன்னமும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள பக்க துணையாக இருங்கள்.

அதே சமயம் தேர்வுகளை ஒன்றுமே இல்லாத அம்சம்... 'நான் தேர்வில் தோற்றும் இப்படி ஆகிவிட்டேன்' என்கிற மாதிரி நிலைத்தகவல்களை தவிருங்கள் அன்பர்களே. தேர்வும் வாழ்க்கையின் அங்கம் தான்; அதில், ஜெயிப்பதும் தேவை. எந்தத் தேர்வு என்பதில்தான் வித்தியாசம்.

வாழ்க்கையின் சிக்கலான புள்ளிகளில் ஜெயித்தவர்கள், எப்படி ஜெயித்தீர்கள் என்று சொல்லுங்கள். இதற்கும் அதற்கும் முடிச்சிடாதீர்கள் !

டென்ஷன் ஆகி, பிள்ளையையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்காதீர்கள். தேர்வு ஒன்றும் உங்கள் தங்கத்தை உரசிப்பார்க்கும் உரைகல் இல்லை. கனிவோடு காத்திருங்கள்; எல்லாருக்கும் வாழ்த்துகள்

சில கலகல தேர்வுகளை கடந்து சாதித்த கதைகள் இவை :

** ஆங்கிலத்தில் தோற்ற ஆர்.கே.நாராயணன்

பள்ளிக் கல்வி முடித்த, ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் என்ற ஆர்.கே.நாராயணன், பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்தார். நுழைவுத் தேர்வில் ஆங்கிலத்தில் தோற்றுப்போனார். ஆனாலும், தொடர்ந்து முயன்று, மகாராஜா கல்லூரியில் இடம் பிடித்தார். அங்கேயும் ஒரு வருடம் கூடுதலாக எடுத்துக்கொண்டே பட்டம் பெற்றார். ஓயாத உழைப்பு, வாசிப்பு, வாழ்க்கை அனுபவங்கள் என்று அவர் கலந்து உருவாக்கிய கதைகள், ஆங்கில இலக்கிய உலகில் இன்றைக்கும் போற்றப்படுகின்றன.

** பெரிதினும் பெரிதாக அப்துல் கலாம்

கல்லூரியில் வினாத்தாள் லீக் ஆனதால், பட்டம் பெற ஓர் ஆண்டு கூடுதலாகக் காத்திருக்க நேர்ந்தது. விமானிகள் தேர்வுக்குச் சென்ற கலாமுக்கு ஒரே ஒரு கிரேடு அதிகம் வந்திருந்தால், விமானி ஆகியிருப்பார். கண்ணீர் மல்க, கங்கையில் குளித்துவிட்டுப், புதிய உத்வேகத்தோடு புறப்பட்டார். விண்ணோடு நேசம் பூண்டார். இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் தந்தை ஆனார்.

** தாமதமாக வென்ற டிராவிட்

டிராவிட், பள்ளிக் காலத்தில் கிரிக்கெட் ஆட நிறைய நேரம் செலவு செய்தார். இதனால், ‘படிப்பில் கோட்டைவிட்டுவிடுவார்’ என்று பெற்றோர் பயந்தார்கள். தலைமை ஆசிரியர்தான் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னார். விளையாடிவிட்டு டிராவிட் வந்ததும் நண்பர்கள், ஆசிரியர்கள் உதவினார்கள். அழகாகப் படித்துத் தேறினார். கிரிக்கெட்டிலும் ஐந்து வருட உழைப்பு, பல்வேறு தடைகளுக்குப் பின்னரே இந்திய அணிக்குள் நுழைந்தார். இப்படிப் பிற்காலத்தில் சொன்னார்… ”கடவுள் தாமதப்படுத்துகிறார் என்பது, தரவே மாட்டார் என்று அர்த்தம் இல்லை.”

** நிராகரிப்பில் ஈஃபிள்

அலெக்ஸாண்டர் குஸ்டவ் ஈஃபிள் (Alexandre Gustave Eiffel) படிக்க ஆசைப்பட்டு, பொறியியல் கல்வி நிறுவனத்துக்கு விண்ணப்பம் போட்டார். கணக்கில் மட்டும் இன்றி, எல்லாவற்றிலும் பையன் வீக் என்று சொல்லி, கல்லூரியில் இடம் தர மறுத்தார்கள். அழுகை அழுகையாக வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு வெளியேறினார். நம்பிக்கை, கவனித்தல், கட்டடங்களின் மீதான ஆசை என எல்லாமும் சேர்ந்து, அவரை சாதனையாளர் ஆக்கியது. அவர் படைத்த அற்புதங்கள்தான் ஈஃபிள் கோபுரம், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை.

பள்ளியில் படிக்க லாயக்கில்லை என்ற எடிசன் இறந்த பொழுது அமெரிக்காவே இருளில் மூழ்க வைக்கப்பட்டு மீண்டும் விளக்குகள் ஒளிர விடப்பட்டு அமெரிக்காவை ஒளியால் மாற்றியவர் என்று புகழ்ந்தார்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வில் தோற்றுப்போன சச்சினின் கவனம் கிரிக்கெட்டில் குவிந்தது, பத்தாம் வகுப்பு பாடத்தில் அவரைப்பற்றியே பாடம் படித்தார்கள் பிள்ளைகள்.

பதினாறு வயதில் பள்ளிப்படிப்பை துறந்து ராணுவம் போய் எண்ணற்ற கனவுகள் கண்டு தெருவோரத்தில் படுத்து,வாரக்கணக்கில் பசியோடு போராடி இருபத்தி ஆறு ஆஸ்கர்களை அள்ளினார் வால்ட் டிஸ்னி.

No comments:

Post a Comment