Sunday, November 16, 2014

Wonderful tirunelveli...

Wonderful tirunelveli

என் நண்பர்கள் உங்க ஊர்ல டைம் பாஸ்க்கு ஊர் சுத்த இடம் இருக்கானு கேட்டார்கள் . . எங்க ஊர்ல இல்லாத இடமா இதோ கேட்டுக்கோ ..
அ) பாபநாசம் நீர்வீழ்ச்சி ஆ) மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி இ) குற்றாலம் ஈ) கிருஷ்ணாபுரம் உ) திருக்குறுங்குடி ஊ) முண்டந்துறை புலிகள் புகலிடம் எ) களக்காடு புலிகள் புகலிடம் ஏ) கூந்தக் குளம் பறவைகள் புகலிடம் ஐ) அரியகுளம் பறவைகள் புகலிடம்.

பாபநாசம் நீர்வீழ்ச்சி
அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்திய மலையில் தோன்றும் சிற்றாறு மேலணையிலிருந்து 40 அடி தொலைவில் விழுகிறது.

மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி
குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம். பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம். மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி ஓர் அழகு தான்.

குற்றாலம்
திருக்குற்றாலம், தென்காசியிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் அருவியைப் பார்ப்பதற்கு ஏற்று காலமாகும். குற்றாலத்தைப் பற்றி இலக்கியங்கள் நிரம்பப் பேசுகின்றன. இவ்வுரைச் சிறப்பித்து 'குற்றால குறவஞ்சி' என்ற இலக்கியம் எழுந்துள்ளது. குற்றாலத்தில் அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு ஆகும். இந்த ஆறு திரிகூட மலையில் தோன்றி, வரும் வழியில் முதலில் நூறு அடி உயரத்திலிருந்து விழுகிறது.

தேன் அருவி
தேன் அடைகள் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்று.

செண்பக அருவி
தேனருவி ஒன்றரைக்கல் வரையிலும் மலையில் சிற்றாறாக ஓடி, பிறகு செண்பக மரங்கள் நிறைந்த காட்டு வழியே பாய்ந்து, முப்பது அடி உயரமுள்ள அருவியாக விழுகிறது. இதனால் செண்பக அருவி என்று பெயர் பெற்றுள்ளது.

பொங்குமாகடல்
செண்பக அருவியிலிருந்து 2 கல்தூரம் பாய்ந்து, இருநூற்று எண்பது அடி உயரமுள்ள அருவியாகக் குதிக்கிறது. இந்த இடத்தில் ஒரே வீழ்ச்சியாக இல்லாமல் பாறை மேல் விழுந்து பொங்கி விரிந்து கீழ்நோக்கி விழுகிறது. இப்படி பொங்கி எழுவதால் இதைப் பொங்குமாகடல் என்று கூறுகிறார்கள்.

புலி அருவி
குற்றாலத்துக்குக் கிழக்கே முக்கால் மைல் தொலைவில் புலி அருவி இருக்கிறது. புலிகள் வந்து நீர் அருந்துவதால் இப்பெயர் பெற்றது.

ஐந்தருவி
சிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகிறது. அதனால் இதனை ஐந்தருவி என அழைக்கின்றனர். ஆற்றுநீர், ஐந்து அருவிகளாக விழும் காட்சி கண்களுக்கு இனிமையாகும். செண்பக அருவிக்கு அருகில் செண்பக தேவி அம்மன் கோயில் இருக்கிறது. சாரல் காலத்தில் வெயில் மழை தூறுவதும் மாறி மாறி நடக்கும். நீர்த்திவலைகள் துள்ளித் தெறிப்பது சிறு மழைபோல் தோன்றும். பெரிய அருவியில் சாரல் காலத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். குற்றாலநாதர் கோயிலுக்குத் தென்புறம் குறும்பலா இருக்கின்றது. ஐந்தருவிக்குப் போகும் வழியில் கூத்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சித்திர சபை என்னும் சிறிய கோவில் ஒன்றும் உள்ளது. அருவி விழுகின்ற ஒலி நெடுந் தொலைவு வரை கேட்கும். உடலில் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு நின்றால் சீயக்காய் தேய்க்காமலே எண்ணெய் போய் விடும். குற்றாலத்தில்-இரவிலும் பகலிலும் அருவியைப் பார்ப்பது அழகுதான்.

கிருஷ்ணாபுரம்
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலிக்கு 12கி.மீ தொலைவில் குமார கிருஷ்ணப்பா என்ற நாயக்க மன்னரால் இவ்வூரும் கோவிலும் அமைக்கப்பட்டன. வேங்கடாசலபதி கோவில் என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதப் பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுள்ள சிலைகளின் அழகைக் சொல்லி மாளாது. தொங்கு மீசையுடன் குறவன் அரசகுமாரியைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது, பெண்ணின் உடலில் இக்காலத்தில் அணியும் (பிரேசியர்) மார்ப்புக் கச்சை காணப்படுவது வியப்பான செய்தி. சீன முகத்துடன் தேவகணம் படைத்திருப்பது, இப்பகுதியில் சீனர்கள் இருந்ததைத் தெரிவிக்கிறது.

திருக்குறுங்குடி
இது நெல்லையிலிருந்து 43 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கை சூழ்ந்த மகேந்திர மலை அடிவாரத்தில், நம்பியாற்றின் கரையில் இருக்கிறது. பெருமாளுக்கு நம்பிராஜன் என்று பெயர். இத்தென்கலை வைணவக் கோயிலில் சிவபெருமானும் இருக்கிறார். நால்வர், பைரவர், சண்டிகேசுவரர் முதலிய பரிவார தேவதைகளும் இருப்பதால் சிவன் கோயில் வைணவத்தலமாக மாற்றப்பட்டிருக்கலாம் என்கிற கருத்து உண்டு. இங்குள்ள சிவனை "பக்கல் நின்றார்" என்று திருமங்கையாழ்வார் குறிப்பிட்டுள்ளார். இவ்வூர் பெருமாளைப்பற்றி பெரியாழ்வார், திருமழிசைஆழ்வார் நம்மாழ்வார், சடகோபர், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் முதலியோரால் பாடல் பெற்ற தலமாகும். இங்குதான் நம்மாழ்வார் பிறந்தார். இக்கோவிலில் கார்த்திகை, பங்குனி, ஏகாதசித் திருவிழாக்கள் சிறப்பாக நிகழ்ந்து வருகின்றன. யாளி மண்டபம், இரத மண்டபம், ஜஂயர் மண்டபம், சித்திர கோபுரம், இசக்கியம்மன், ஆண்டாள், குறுங்குடிவல்லித் தாயார் சந்நிதிகள் உள்ளன.

முண்டந்துறை புலிகள் புகலிடம்
திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது. இப்புகலிடம் புலிகளின் பாதுகாப்பு கருதி உண்டாக்கப்பட்டது. மேலும் இங்கு சிறுத்தை, சாம்பார் மான், பன்றிக் கரடி, நீலகிரி வகை குரங்கு, சிங்கவால் குரங்கு போன்றவைகளைக் காணலாம். முண்டந்துறையைக் காண ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து ஜனவரி வரை செல்லலாம். தங்குவதற்கு ஏற்ற வசதிகள் உண்டு. முன்னரே பதிவு செய்ய வேண்டும்.

களக்காடு விலங்குப்புகலிடம்
திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது. தாவர வியலாளர்களுக்கும், விலங்கியலாளர்களுக்கும் ஏற்ற இடம். இங்கு பலவகையான தாவரங்களும், பறவைகளும் காணக்கூடியதாக இருக்கின்றன. இங்குப் புலி, சிறுத்தை, குள்ளநரி, காட்டு நாய்கள், ராஜநாகம் மலைப்பாம்பு, பலவகைப்பாம்புகள் ஆகியவை காணப்படு கின்றன. இப்புகலிடத்தைக் காண்பதற்கு ஏற்ற மாதங்கள் : மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை; இங்கு சிங்கவால் குரங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மேலும் காணத்தகுந்த இடங்களாக இருக்கும் பறவைகள் புகலிடங்கள் கூந்தக்குளம் பறவைகள் புகலிடம், மற்றும் அரியகுளம் பறவைகள் புகலிடம் முதலியவை.

 

No comments:

Post a Comment