Friday, May 22, 2015

'ஓம்' மந்திரத்தின் சிறப்பு

'ஓம்' மந்திரத்தின் சிறப்பு

நம் நாட்டில் மிகவும் பக்தியுடன் உச்சரிக்கப்படும் புனித மந்திரம் 'ஓம்'. இதை பிரணவ மந்திரம் என்றும், இந்த பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாகவும், 'ஓம்' என்பது இறைவனின் ஒலி வடிவமாகவும் வேத முனிவர்கள் கருதினார்கள். வேதங்களின் சாரம் அனைத்தும் 'ஓம்' என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளன.
இந்த 'ஓம்' மந்திரம் உச்சரிப்பவர்களின் உள்ளத்திற்கு அமைதியையும், அறிவிற்கு கூர்மையையும் ஏற்படுத்தும், நன்மை தரும் மின் அதிர்வுகளை உண்டாக்குகிறது. நம் நாட்டில் பெரும்பாலான மந்திரங்களும், வேதப் பிரார்த்தனைகளும் 'ஓம்' என்ற ஒலியுடன் தான் தொடங்குகின்றன. எல்லா மங்கள நிகழ்ச்சிகளும் 'ஓம்' என்ற ஒலியுடனே தொடங்கப்படுகின்றன.
'ஓம்' மனதை அமைதிப்படுத்தி ஒருமுகப்படுத்துவதால் தியானம் செய்யும் பொழுதும் 'ஓம்' எனும் மந்திரம் மனதுக்குள் உச்சரிக்கப்படுகிறது. 'ஓம்' எனும் எழுத்து வடிவமும் பக்தியுடன் வணங்கப்படுகிறது. 'ஓம்' ஒரு மங்களச் சின்னமாகப் போற்றப்படுகிறது. 'ஓம்' என்பது இறைவனின் பொதுப் பெயர். இச்சொல் 'அ', 'உ' மற்றும் 'ம்' என்ற மூன்றெ ழுத்துகளால் உருவாகிறது.
'அ' என்னும் ஒலி நம் தொண்டையின் அடிப்பாகத்தில் உள்ள குரல் நாண்களிலிருந்து தோன்றுகிறது. உதடுகளைக் குவித்து 'உ' சொல்லப்படுகிறது. உதடுகள் சேரும்போது 'ம்' எனும் ஒலியில் அது முடிவடைகிறது.
இந்த மூன்று எழுத்துகளும் விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்ந்த உறக்க நிலை ஆகிய மூன்று உணர்வு நிலைகளையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களையும் ரிக், யஜுர் மற்றும் சாம என்ற மூன்று வேதங்களையும் குறிப்பதாக சொல்லப்படுகின்றன. பகவத்கீதையில் கிருஷ்ணர் எட்டாவது அத்தியா யத்தில் பதின்மூன்றாவது சுலோகத்தில் கூறுகிறார்...
'எவனொருவன் பரம்பொருளாகிய 'ஓம்' என்ற ஓரெழுத்துச் சொல்லை உச்சரித்துக்கொண்டும், என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றானோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்'.
'ஓமெனு ஓங்காரத்துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத்துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத்துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே' என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்.
'ஓம்' என்பதை உச்சரிக்கும் பொழுது முதலில் ஒரு சொல்லாகவும், பின் உருவமாகவும், அதன் விளக்கங்கள் பலவாகவும், அதை உச்சரித்து தியானிப்பதால் முக்தியும், சித்தியும் கிட்டும் என்றும் திருமூலர் கூறுகிறார்

No comments:

Post a Comment